இறைவன் அருளால் காணும் கனவெல்லாம் பலிக்கும்... வைரலாகும் விக்னேஷ் சிவன் ட்வீட்


இறைவன் அருளால் காணும் கனவெல்லாம் பலிக்கும்... வைரலாகும் விக்னேஷ் சிவன் ட்வீட்


நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி அதிரடியை கிளப்பி வருகிறது வலிமை படம். இந்தப் படம் இரண்டு ஆண்டுகள் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரிலீசானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்துள்ளது.

இதையடுத்து இதே கூட்டணியுடன் அஜித் இணையும் மூன்றாவது படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கவுள்ளது. இதற்கென அங்கு பிரம்மாண்டமான அளவில் மவுண்ட் ரோடு செட் போடப்பட்டு வருகிறது. இந்தப்படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக முன்னதாகவே தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் அஜித்தின் அடுத்தப்பட அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. விக்னேஷ் சிவன் படத்தை இயக்கவுள்ளார். அனிருத் மூன்றாவது முறையாக இந்தப் படத்தின் மூலம் அஜித்துடன் இணைகிறார்.

இதுகுறித்து நேற்றைய தினம் லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. முதல்முறையாக அஜித்துடன் இணைவது குறித்தும் லைகா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வாய்ப்பு குறித்து டைரக்டர் விக்னேஷ் சிவனும் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும் என்றும் காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அஜித்துடன் இணையும் இந்த வாய்ப்பு வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாதது என்றும் கூறியுள்ளார்.

அஜித்திற்காக பாடல்கள்


அவர் அஜித்தை இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக இயக்கினாலும் முன்னதாகவே அஜித்துடன் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு படத்தின் பாடல் வரிகளை விக்னேஷ்தான் எழுதியிருந்தார். இந்தப் பாடல் அஜித்தின் முக்கியமான பாடலாக பார்க்கப்படுகிறது.

இதேபோல வலிமை படத்திலும் அம்மா பாடல் மற்றும் நாங்க வேற மாதிரி என்ற இரு பாடல்களை எழுதியுள்ளார். இந்தப் பாடல்களில் அம்மா பாடல் அஜித்தை மிகவும் கவர்ந்ததாகவும் இதையடுத்து விக்னேஷ் சிவனை அவர் பாராட்டி, தனக்காக ஒரு கதையை உருவாக்க கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதுவே தற்போது அஜித்62வாக உருவாகவுள்ளது. விக்னேஷ் சிவனின் முந்தைய படங்களான நானும் ரவுடிதான் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் ஆகியவை வித்தியாசமான கதைக்களங்களுடன் வெளியாகின. தற்போது அவரது இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் வெளியாகவுள்ளது.

ரசிகர்களை திருப்திப்படுத்துவாரா?

இந்நிலையில் அஜித்திற்கென அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை விக்னேஷ் சிவன் எப்படி பூர்த்தி செய்யப் போகிறார் என்பதே அனைவரது கேள்வியாக உள்ளது. இவர்களது கேள்விகளுக்கு தன்னுடைய ஏகே 62 படத்தின் மூலம் சிறப்பான விடையை விக்னேஷ் சிவன் அளிப்பார் என்று நம்பலாம்.

Comments

Popular posts from this blog