ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காத அரசியல் கட்சிகள்.!


ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காத அரசியல் கட்சிகள்.!


சித்திரை ஒன்றாம் தேதி தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில், நாளை தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த விருந்தை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிகைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணை வேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி முடிவு செய்துள்ளது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
 
இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ஆளுநர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு நன்றி. எனினும், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கும் ஆளுநரின் செயலை கண்டித்து இந்த தேநீர் விருந்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது. தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் ஆளுநர், சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களை கேலி செய்வது போல் உள்ளது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் விரைந்து அனுப்ப வேண்டும்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநரின் தேநீர் விருந்தை இரு கட்சிகளும் புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Comments

Popular posts from this blog